உலகம்

இன்சூரன்ஸ் பணத்துக்காக கால்களை அகற்றிய டாக்டர்.. பிரிட்டனில் அதிர்ச்சி!

By Christon
25 Jul 2025, 04:46 PM
டாக்டர் ஒருவர் ரூ.5 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக தன் இரண்டு கால்களையும் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் ஒருவர் இன்சூரன்ஸ் பணம் 5 கோடி பெறுவதற்காக தன் இரண்டு கால்களையும் அகற்றிய சம்பவம் பிரிட்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ காப்பீட்டு மோசடி

பிரிட்டனின் ட்ரூரோவைச் சேர்ந்த 49 வயதான நீல் ஹாப்பர் என்ற அறுவை சிகிச்சை நிபுணர், 2019 ஆம் ஆண்டில் தனது கால்களை இழந்ததாகக் கூறி,5 லட்சம் பவுண்டுகள் (சுமார் ₹5.4 கோடி) காப்பீட்டுத் தொகையைப் பெற விண்ணப்பித்துள்ளார்.

காப்பீட்டு நிறுவனங்களின் சந்தேகம்

ஆனால், ஹாப்பர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் சந்தேகம் தெரிவித்தன. ஹாப்பர் தனக்கு இரத்த நாளப் பிரச்சினை இருப்பதாகவும், கால்கள் அகற்றப்படாவிட்டால் அது உடல் முழுவதும் பரவும் என்றும் காப்பீட்டு நிறுவனங்களை நம்ப வைக்க முயன்றதாக அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கில் காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

வெளிச்சத்திற்கு வந்த உண்மை

இதுகுறித்து, போலீசார் நடத்திய இரண்டரை ஆண்டு கால தீவிர விசாரணைக்குப் பிறகு ஹாப்பரின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. ஆகஸ்ட் 2018 முதல் டிசம்பர் 2020 வரை, ஒரு இணையதளத்திலிருந்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த பிரீமியம் வீடியோக்களை அவர் வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு மருத்துவரின் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சையைச் செய்துள்ளார்.

கைது மற்றும் வழக்கு விசாரணை

இதனைத்தொடர்ந்து, போலீசார் நீல் ஹாப்பரை கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த சம்பவம் பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.