Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அலறி ஓடும் மக்கள்

By nagalekshmi
28 Mar 2025, 01:04 PM
மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீதியில் தஞ்சம் புகுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மியான்மரில் இன்று (மார்ச் 28) காலை 11:50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.7  ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கமானது அண்டை மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

பாங்காக்கில் நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கிய நிலையில் மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். அதுமட்டுமல்லாமல், வீடுகள் குலுங்கி ஜன்னல் கண்ணாடிகளில் கீறல் விழுந்துள்ள வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பாங்காக்கில் நிலநடுக்கத்தின் போது கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

தொடர் நிலநடுக்கம்:

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மரில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.தொடர்ந்து, ஜனவரி 24-ஆம் தேதி மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில்  4.8 ஆக பதிவாகி இருந்தது. பூமிக்கு அடியில் 127 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது பெரும் சேதத்தை ஏற்பட்டுத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.