உலகம்

கடத்தப்பட்ட ரயிலில் 155 பேர் பத்திரமாக மீட்பு.. ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழப்பு

By VASUKI
12 Mar 2025, 04:49 PM
கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ரயிலில் சிக்கி கொண்ட 400 பயணிகளில் 155 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 27 பேர் பலியாகினர். தொடர்ந்து ரயில் உள்ள எஞ்சியோரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 155 பணய கைதிகளை மீட்ட பாதுகாப்பு படையினர் 27 கிளர்ச்சியாளர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் இருந்து கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் நேற்று சுமார் 400 பயணிகள் பயணித்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணம் கூடலர், பிரு குன்ரி நகரங்களுக்கு இடையே மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிப்படையினர் ரயிலை கடத்தினர். சுரங்கப்பாதை அருகே மலைப்பகுதியில் ரயிலை நிறுத்திய கிளர்ச்சியாளர்கள் அதில் இருந்த பயணிகள் அனைவரையும் பணய கைதிகளாக சிறைபிடித்தனர். இந்த ரயிலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், போலீசார், உளவுத்துறை அதிகாரிகளும் பயணித்துள்ளனர்

Read More: இதய அறுவை சிகிச்சையில் சாதனை - இம்பெல்லா பம்ப் பொருத்தம்

இதில் சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பலூசிஸ்தான் கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது. தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், கிளர்ச்சியாளர்கள்  உடன் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலுக்கு இடையே பணய கைதிகளில் பெண்கள், குழந்தைகள் என 155 பேரை பாதுகாப்புப்படை பத்திரமாக மீட்டுள்ளது. 

Read More: ஒரு குப்பை தொட்டி கூட இல்லையா..? அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

இந்நிலையில், பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 30 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், கிளர்ச்சியாளர்கள் வசம் 200க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க பாதுகாப்புப்படையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போதும் பாதுகாப்புப்படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.