Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரே நாளில் 106 பேர் பலி!

By VASUKI
02 Aug 2025, 03:21 PM
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில், ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெண்கள், குழந்தைகள், மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதலை முன்னெடுத்துவருகிறது. உணவுக்காகக் காத்திருந்த பொதுமக்கள், மற்றும் உதவி மையங்களில் பணியாற்றிய தன்னார்வலர்கள்மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மட்டும் 12 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர்.

உணவுக்காகக் காத்திருப்போரை கொல்வது, உதவி மையங்களில் காத்திருக்கும் பொதுமக்கள்மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, கடந்த சில வாரங்களில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. தற்போது வரை 162 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 92 குழந்தைகள் அடங்குவதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக, காசாவில் நடத்தப்பட்ட இந்தப் போர் மற்றும் தாக்குதல்களில் இதுவரை 60,332 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 1,47,000 பேர் காயமடைந்துள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. பொதுமக்கள்மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களால் மக்கள் இடம்பெயர முடியாமல் இடையூறுகள், உணவு, மருத்துவம், குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.

இது போன்ற தொடர் தாக்குதலில் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில், உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐநா போன்ற அமைப்புகள் இந்நிலையில் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.