தமிழக பட்ஜெட் 2026

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள்.. 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு..!

By VASUKI
14 Mar 2025, 04:11 PM
தமிழக பட்ஜெட்டில், திருக்குறள் மொழிபெயர்ப்பு, மேலும் 8 இடங்களில் அகழாய்வு உட்பட தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

2026 தேர்தலுக்கு முந்தைய கடைசி தமிழக பட்ஜெட், சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், தமிழ் மொழி வளர்ச்சி உட்பட அதன் நலன் சார்ந்து பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டன. அதன்படி, திருக்குறளை மேலும் 47 மொழிகளில் மொழிபெயர்க்க 1 புள்ளி 33 கோடியும், 500 தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்ப்புத்தக கண்காட்சி

அதேபோல், பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்க 2 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் அதிகம் வாழும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில், அகர மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், ஆண்டுதோறும் ஒரு கோடி பரிசுத் தொகையுடன் கூடிய உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அகழாய்வு

மேலும், ஈரோட்டில் 22 கோடியில் நொய்யல் அருங்காட்சியகமும், ராமநாதபுரத்தில் 21 கோடியில் நாவாய் அருங்காட்சியகமும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கீழடி, தெலுங்கனூர், வெள்ளலூர், ஆதிச்சனூர், மணிக்கொல்லை, கரிவலம்வந்தநல்லூர், நாகை பட்டணமருதூரில் அகழாய்வு மேற்கொள்ளப்படவுள்ளன.

எழும்பூர் அருங்காட்சியகத்தில் ரூ.40 கோடியில் ஐம்பொன், செப்புத் திருமேனிகள் காட்சிக் கூடம் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: தமிழக பட்ஜெட் 2025:பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி நிதி ஒதுக்கீடு..!