தொழில்நுட்பம்

BSNL Freedom Offer: 1 ரூபாய் போதும்.. 30 நாளைக்கு தினசரி 2GB டேட்டா!

By MUTHUKRISHNAN
02 Aug 2025, 12:20 PM
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.1-க்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 4ஜி இணைய சேவையுடன் கூடிய ஃப்ரீடம் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திரத் தினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரத் தினத்தினை முன்னிட்டு, அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் அட்டகாசமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

BSNL FREEDOM OFFER என்கிற பெயரில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக புதிய சிம்மினை பெறுவதோடு, வெறும் ரூ.1 மட்டும் செலுத்தினால் போதும் வாடிக்கையாளர் 30 நாட்களுக்கு அதிரடி சலுகைகளை பெறுவார்கள். வரம்புகளற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் (Unlimited voice calls), ஒருநாளைக்கு 2GB டேட்டா (அதுவும் 4G வசதியுடன்), தினசரி 100 எஸ்.எம்.எஸ் சேவையினை பெறுவார்கள். இந்த சலுகை ஆகஸ்ட் 31 வரை மட்டுமே.

பி.எஸ்.என்.எல் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பானது, புதிய சிம் பெறும் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கெனவே பி.எஸ்.என்.எல் சிம்மினை பயன்படுத்தும் நபராக இருந்தால் இந்த சேவையினை பெற இயலாது. பி.எஸ்.என்.எல் சிம்மினை டோர் டெலிவரி மூலம் பெறுபவர்களுக்கு இந்த சலுகை பொருந்துமா? என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முறையே மேற்குறிப்பிட்ட சலுகையினை ரூ.349, ரூ.379 மற்றும் ரூ.399- க்கு வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம் நாடு முழுவதும் தன் வாடிக்கையாளருக்கு தடையற்ற 4G சேவையினை வழங்கும் நோக்கத்தோடு சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான கோபுரங்களை உருவாக்கி வருகிறது. கிராமப்புறங்களில் வசிப்பவர்களும் 4G சேவையினை பெற அரசின் இந்த நடவடிக்கை உதவும் என எதிர்ப்பார்க்கப்படும் சூழ்நிலையில், 4G இணைய சேவையுடன் கூடிய ஃப்ரீடம் சலுகை பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.