தொழில்நுட்பம்

360 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்!

By MUTHUKRISHNAN
17 Jul 2025, 11:38 AM
மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) நிறுவனத்துடன் ஒரு கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், ஏர்டெல்லின் 360 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஒரு வருட காலத்திற்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்தலாம். பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ ஆண்டு சந்தாவின் மதிப்பு சுமார் ₹17,000 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலம் இந்தச் சலுகையை நீங்கள் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.

பெர்ப்ளெக்சிட்டி ப்ரோவின் சிறப்பு அம்சங்கள்:

நாம் வழக்கமாக ஏதாவது ஒன்றை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், என்ன செய்வோம்? கண்களை மூடிக்கொண்டு கூகுளில் போய் தேடுவோம் இல்லையா.. அதே பணியை தான் பெர்ப்ளெக்சிட்டியும் செய்கிறது. இதில் என்ன வித்தியாசம் என்னவென்றால் பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ என்பது ஒரு மேம்பட்ட AI-உதவியுடன் இயங்கும் தேடல் மற்றும் பதிலளிக்கும் இயந்திரமாகும் (AI search based engine).

பெர்ப்ளெக்சிட்டியில் கிடைக்கும் பதில்களானது நிகழ்நேர (real-time), துல்லியமான (accurate) மற்றும் ஆழ்ந்த ஆராய்ச்சியின் (deeply researched) அடிப்படையில் அமைந்திருப்பது தான் கூடுதல் சிறப்பு. கூகுளுக்கு இணையான தேடுப்பொறி எதுவும் இல்லை என பேசப்பட்ட வந்த நிலையில் கூகுளுக்கே சவால் விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது தான் பெர்ப்ளெக்சிட்டி.

டிஜிட்டல் உலகினை புரிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு:

இந்தக் கூட்டணி குறித்து பாரதி ஏர்டெல் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கோபால் விட்டல் கூறுகையில், "ஏர்டெல்-பெர்ப்ளெக்சிட்டி கூட்டணியானது டெக் உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன AI திறன்களை பயன்படுத்த வாய்பளிக்கும். இது டிஜிட்டல் உலகில் மாறிவரும் போக்குகளைப் புரிந்துகொள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவும்" என தெரிவித்துள்ளார்.

பெர்ப்ளெக்சிட்டியின் இணை நிறுவனர் மற்றும் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "துல்லியமான, நம்பகமான AI-ஐ இந்தியாவிலுள்ள அதிகமான மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கான ஒரு சிறந்த வழியாக ஏர்டெல்லுடன் கைக்கோர்த்திருப்பதை கருதுகிறோம். மாணவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் என அனைவருக்கும் இது தகவல் அணுகலை எளிதாக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



தற்போது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பெர்ப்ளெக்சிட்டி ப்ரோவினால் கிடைக்கும் பயன்களின் விவரம் பின்வருமாறு..

1. வரம்புகளற்ற தேடல்: தினசரி இவ்வளவு தேடல்களை தான் மேற்கொள்ள முடியும் என்றில்லாமல், தேவைக்கேற்ப பயன்படுத்த இயலும்.
2. மேம்பட்ட ஏஐ மாடல்: GPT 4.1, கிளாட் (Claude) போன்றவற்றை அணுக இயலும்.
3. ஆலோசனை வழங்கல்: உதாரணத்திற்கு, ‘நான் சென்னையில் வசிக்கிறேன். என் குடும்பத்துடன் 5000 ரூபாய் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டும் என திட்டமிட்டுள்ளேன். உனது ஆலோசனைகளை வழங்கு” என குறிப்பிட்டால் அது பக்காவாக பிளான் போட்டு ஒரு பட்டியலை உங்களிடம் வழங்கும்.
4. பட உருவாக்கம்
5. கோப்பு பதிவேற்றம் மற்றும் பகுப்பாய்வு
6. ஆராய்ச்சி: மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்றவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு மிகவும் ஆழமான தகவல்களை கண்டறிய உதவுகிறது.