தொழில்நுட்பம்

'எக்ஸ்' தளத்தில் ஆபாசத்திற்குத் தடை.. இந்திய பயனர்கள் அதிர்ச்சி!

By Christon
04 Mar 2026, 03:07 PM
இந்தியாவில் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் ஆபாச உள்ளடக்கங்களுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் 'எக்ஸ்' தளத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 23.1 மில்லியன் பயனர்களுடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. நீண்டகாலமாக 'எக்ஸ்' தளத்தில் ஆபாச உள்ளடக்கங்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்த வசதி முடக்கப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பமும் எழுந்த புகார்களும்

'எக்ஸ்' தளத்தின் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு 'க்ரோக்' (Grok) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) வசதி வழங்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் சிலர் பிரபலங்கள், பெண்கள் மற்றும் சிறார்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரவதை செய்து போலி கணக்குகளில் பதிவிடுவதாகப் புகார்கள் குவிந்தன. இது சமூக ரீதியாகப் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது.

மத்திய அரசின் 72 மணி நேரக் கெடு

இந்தப் புகார்களைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த 2-ம் தேதி 'எக்ஸ்' நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-ன் படி, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்களை 72 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும், இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

மாயமான 'புக்மார்க்'கள்: பயனர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் உத்தரவுக்குப் பணிந்த 'எக்ஸ்' நிர்வாகம், தற்போது இந்தியப் பயனர்களுக்கு மட்டும் ஆபாச உள்ளடக்கங்களைப் பார்க்கவும், பகிரவும் தடை விதித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், பயனர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த ஆபாச உள்ளடக்கங்கள் அடங்கிய 'புக்மார்க்' (Bookmark) பகுதிகள் திடீரென மாயமாகியுள்ளன. இதனால் பல பயனர்கள் அதிர்ச்சியடைந்து சமூக வலைதளங்களில் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.