Kumudam News 24 X 7 AMP Article
விளையாட்டு

இந்திய வீரர்கள் அசத்தல் வெற்றி - பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்றைய போட்டிகள்: [முழு விவரம்]

By leninakathiya
01 Aug 2024, 03:38 PM
Paris Olympics 2024 India Full Schedule Day 6 : நேற்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல், மகளிர் குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றிபெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Paris Olympics 2024 India Full Schedule Day 6 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். அதேபோல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்களுக்கான போட்டியில், மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

துப்பாக்கிச் சுடுதல்:

இந்நிலையில், 4ஆவது நாளான நேற்று, துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே 7-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

குத்துச்சண்டை:

மகளிர் குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லோவ்லினா, நார்வே வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

டேபிள் டென்னிஸ்:

மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சிங்கப்பூரின் ஜியான் ஜெங்கை 9-4, 12-10, 11-4, 11-5, 11-12, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய 2-வது இந்தியர் என்ற பெருமையை ஸ்ரீஜா அகுலா பெற்றார்.

பேட்மிண்டன்:

மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் ‘எம்’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, எஸ்டோனியாவின் கிரிஸ்டன் கூபாவை 21-5, 21-10 என்ற நேர் செட்டில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் பி.வி.சிந்து மூலம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோல, ஆடவர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்று போட்டியில், ‘எல்’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் லக்‌ஷயா சென், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இன்றைய போட்டிகள்:

11.00: ஆடவருக்கான 20 கி.மீ வேகநடைப் போட்டியில் இந்திய பரம்ஜீத் சிங், அக்‌ஷ்தீப் சிங், விகாஷ் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

12.30: ஆடவர்களுக்கான தனிநபர் கோல்ஃப் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் ககன்ஜீத் புல்லர், ஷுபன்கர் ஷர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

12.50: மகளிருக்கான 20 கி.மீ. வேகநடைப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா பங்கேற்கிறார்.

மதியம் 01.00: துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே பங்கேற்கிறார்.

மதியம் 01.30: ஆடவர் ஹாக்கிப் போட்டியில் ‘பி’ பிரிவில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

மதியம் 02.30: மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டியில், 50 கிலோ பிரிவில், தொடக்கநிலை சுற்றில், இந்திய வீராங்கனை ஷரீன் நிகத், சீன வீராங்கனை எதிர்த்து மோதுகிறார்.

மாலை 03.00: ஆடவர் வில்வித்தை போட்டியில், இந்தியாவின் பிரவின் ரமேஷ், சீனாவின் கவோ வென்சவோ-வை எதிர்த்து விளையாடுகிறார்.

மாலை 03.50: மகளுருக்கான 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில், 3 பொஷிஷன் தகுதிச்சுற்றுப் போட்டியில், சிஃப்ட் கவுர் சம்ரா மற்றும் அஞ்சும் மௌத்கில் பங்கேற்கின்றனர்.

மாலை 03.45: ஆடவர் படகுப்போட்டியில் இந்தியாவின் விஷ்ணு சரவணன், ரேஸ் 1 மற்றும் ரேஸ் 2 ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறார்.

மாலை 04.30: ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ரங்கி ரெட்டி & ஷெட்டி இணை மலேசியாவின் சியா & சோஹ் இணையை எதிர்த்து விளையாடுகின்றனர்.

இரவு 07.05: மகளிர் படகுப்போட்டியில், இந்தியாவின் நேத்ரா குமணன் பங்கேற்கிறார்.

இரவு 10.00: மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில், 16ஆவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன வீராங்கனையை எதிர்த்து விளையாடுகிறார்.