Kumudam News 24 X 7 AMP Article
விளையாட்டு

ஆர்சிபி வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அலுவலகத்தில் மனு..!

By Christon
29 Jun 2025, 05:06 PM
ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வேகப்பந்து வீச்சாளருமான யாஷ் தயால் மீது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.

யாஷ் தயால் மீது அதிகாரப்பூர்வமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. உள்ளூர் காவல் நிலையத்தில் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், உயர் அதிகாரிகளின் உதவியை நாடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்திலும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

ஃஎப்ஐஆர் படி, அந்தப் பெண் யாஷ் தயாலுடன் 5 வருடங்களாக உறவில் இருந்ததாகவும், இந்த காலகட்டத்தில் அவரது குடும்பத்தினரைச் சந்தித்ததாகவும் கூறியுள்ளார். இந்த உறவின் போது தயால் தன்னை மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

யாஷ் தயால் இதேபோன்ற மற்ற பெண்களுடனும் உறவில் இருந்து ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளதை பின்னர் கண்டறிந்ததாகவும், இதுவே சட்ட நடவடிக்கை எடுக்கத் தன்னைத் தூண்டியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அவர் முதலில் கடந்த 14 ஆம் தேதி அன்று பெண்கள் உதவி எண்ணை (181) தொடர்பு கொண்டுபுகார் அளித்துள்ளார். ஆனால் உள்ளூர் காவல் நிலையத்தில் முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறினார்.

இதனையடுத்து, அவர் நீதிக்கோரி நேரடியாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தை அணுகியுள்ளார். தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக வாட்ஸ் ஆப் உரையாடல்கள், ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் வீடியோ கால் பதிவு போன்றவற்றை அவர் சமர்ப்பித்துள்ளார். யாஷ் தயாளுக்கு சட்டப்படி தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

இதுவரை, யாஷ் தயால் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து எந்தப் பொது அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்த விவகாரம் போலீஸ் விசாரணையில் உள்ளது.