விளையாட்டு

Arshad Nadeem : தங்கம் வென்ற அர்ஷத் நதீமினுக்கு பரிசு மழை.. உயரிய விருது வழங்கிய பாகிஸ்தான் பிரதமர்!

By Kumudam News
14 Aug 2024, 08:12 PM
Arshad Nadeem Wins Gold Medal in Paris Olympics 2024 : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் அர்ஷத் நதீமிக்கு பாராட்டு விழா நடந்தது. தங்க நாயகனுக்கு விருந்து அளித்து கெளரவப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அர்ஷத் நதீமிக்கு இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி பரிசுத் தொகை வழங்கினார்.

Arshad Nadeem Wins Gold Medal in Paris Olympics 2024 : 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளன. கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கிய போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 5 வெண்கலகம், 1 வெள்ளி என மொத்தம் 6 பதங்கங்களை கைப்பற்றி 71வது இடத்தை பிடித்தது. நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தானும் தங்கம் வென்று அசத்தியது. அதாவது ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதுவும் அவர் 91 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்து ஓலிம்பிக்கில் புதிய வரலாறு படைத்துள்ளார். 

தங்கம் வென்று தனது தாய் நாட்டுக்கு பெருமை சேர்ந்த 27 வயதான அர்ஷத் நதீமிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அர்ஷத் நதீமின் வெற்றியை பாகிஸ்தான் முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தங்கம் வென்று சாதித்த அர்ஷத் நதீமிக்கு பாகிஸ்தான் அரசு பரிசு மழை பொழிந்துள்ளது. 

பாரீஸில் இருந்து நாடு திரும்பிய அர்ஷத் நதீமிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் அர்ஷத் நதீமிக்கு பாராட்டு விழா நடந்தது. தங்க நாயகனுக்கு விருந்து அளித்து கெளரவப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அர்ஷத் நதீமிக்கு இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி பரிசுத் தொகை வழங்கினார்.

மேலும் பாகிஸ்தானில் 2வது பெரிய விருதாக கருதப்படும் சிவில் விருதை அர்ஷத் நதீமிக்கு பாகிஸ்தான் பிரதமர் வழங்கினார். இது தவிர இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு சாலைக்கும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி அகாடமிக்கும் அர்ஷத் நதீமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லத்தில் நடந்த பாராட்டு விழாவில் அர்ஷத் நதீமின் குடும்பத்தினர் மற்றும் அவரது பயிற்சியாளர் சல்மான் இக்பால் பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதவிர பல்வேறு தரப்பினரும் பல கோடி மதிப்பில் அர்ஷத் நதீமிக்கு பரிசு மழை பொழிந்து வருகின்றனர். முன்னதாக, அர்ஷத் நதீமின் மாமனார் முகமது நவாஸ் அவருக்கு எருமை மாடு பரிசாக கொடுத்திருந்தார். தங்கப்பதக்கத்தின் மதிப்பு ஒரு எருமை மாடா'' என்று நெட்டிசன்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால் இதற்கு பதிலடி கொடுத்திருந்த முகமது நவாஸ், ''எங்களது சமுதாயத்தில் எருமை மாட்டை பரிசாக வழங்குவது என்பது மிகவும் மதிப்புமிக்க, மரியாதைக்குரிய செயலாகும். இதன்மூலம்  அர்ஷத் நதீமின் செல்வம் அதிகரிக்கும் என்பது எங்களது நம்பிக்கை'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.