Kumudam News 24 X 7 AMP Article
விளையாட்டு

பெட்ரோல் பங்கில் வேலை.. 2 மகள்கள்.. பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பெண்!

By MUTHUKRISHNAN
16 May 2025, 11:40 AM
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தமிழகப் பெண்.
தாய்லாந்து நாட்டில் சர்வதேச பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்,

இந்த போட்டியில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (வயது 39) என்பவர் இந்தியா சார்பில் 82 கிலோ எடை பிரிவில் பளு தூக்குதல் போட்டியில் பங்கேற்ற நிலையில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோல் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் 56 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து இருவரும் தாய்லாந்தில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பயிற்சியும்..பெட்ரோல் பங்க் வேலையும்:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயஸ்ரீ கூறுகையில், “தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் 82 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்று உள்ளேன். எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம். தற்போது பல்லடம் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறேன். மேலும் நான் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். எனது கணவரும் குடும்பத்தினரும் தான் முழு ஒத்துழைப்பு கொடுத்து எனக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

காலை 5 மணி முதல் ஏழு மணி வரை கடுமையான பயிற்சியில் ஈடுபடுவேன் அதன் பிறகு பெட்ரோல் பங்கிற்கு பணிக்கு சென்று விடுவேன். 2002 ஆம் ஆண்டு முதல் நான் பளுதூக்குதல் தொடர்பாக பயிற்சி எடுத்து பல்வேறு போட்டியில் பங்கேற்று வந்தேன். அதன் பிறகு திருமணம் நடந்ததால் தொடர்ந்து என்னால் இதில் ஈடுபட முடியவில்லை. பின்பு என் குடும்பத்தின் முழு ஆதரவோடு, கடந்த ஐந்து வருடங்களாக பளுதூக்குதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.”

அரசுக்கு சில கோரிக்கை:

”தமிழ்நாடு அரசு இதுவரை எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. அவர்களிடம் சில கோரிக்கையினை முன்வைத்துள்ளோம். நிச்சயம் செய்து தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் பெண்களை வீட்டை விட்டு வெளியே வருவது கடினமான ஒன்று, சில பெண்கள் விருப்பப்பட்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர், ஆனால் குடும்பத்தினர் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என பெண்களை வளர விடாமல் தடுத்து விடுகின்றனர்.

பெண்கள் ஆசைப்பட்டால் நிச்சயம் எதை வேண்டுமானாலும் செய்து முடிக்க முடியும். குடும்பத்தினரும் ஒத்துழைப்பு கொடுத்தால் நிச்சயம் பெரிய அளவில் சாதிப்பார்கள். எங்களைப் போன்று கடுமையான சூழ்நிலையில் கஷ்டப்பட்டு வரும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசு நிச்சயம் உதவி செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்தார்.