விளையாட்டு

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்.. மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை அசத்தல்...

By leninakathiya
30 Jul 2024, 07:20 PM
Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் கலப்பு இரட்டையர்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியவைச் சேர்ந்த மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

Paris Olympics 2024 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பெற்றார். அத்துடன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்தார்.

துப்பாக்கி சுடுதல்:

இந்நிலையில், 3வது நாளான நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்களுக்கான தகுதி சுற்றில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை களமிறங்கியது. இதில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் ஜோடி 580 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து பதக்க சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில், நாளாவது நாளான இன்று மதியம் 01.00 மணிக்கு தொடங்கிய வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்திற்கான போட்டியில், தென் கொரியா இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதல் ஏழு சுற்றுகள் முடிவில் இந்திய இணை 10-4 என்ற கணக்கில் முன்னிலையில் வகித்து வந்தது. பாக்கர் 10.6 புள்ளிகளையும், சரப்ஜோத் 9.4 புள்ளிகளையும் பெற்றிருந்தனர்.

8ஆவது சுற்றில் தென் கொரியா இணை முன்னேற்றம் அடைந்தபோதும், 12 சுற்றுகள் முடிவில் 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் கொரிய இணையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதன் மூலம் இந்திய சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு ஒரு ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.