Kumudam News 24 X 7 AMP Article
விளையாட்டு

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு.. ராபின் உத்தப்பா அமலாக்கத்துறை முன் ஆஜர்!

By Christon
22 Sep 2025, 03:17 PM
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார்.
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு சம்மன் வழங்கப்பட்ட நிலையில், இன்று அமலாக்கத்துறை (ED) முன் விசாரணைக்கு ஆஜரானார்.

வழக்கின் பின்னணி

சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதன் மூலம் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்ததா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

'ஓன்எக்ஸ்பெட்' (1xBet) என்ற சட்டவிரோத பந்தய செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதலீட்டாளர்களைக் கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்ததாக அமலாக்கத்துறை சந்தேகித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராபின் உத்தப்பா இன்று ஆஜர்

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து, ராபின் உத்தப்பா இன்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுவராஜ் சிங் நாளை ஆஜர்

இதே வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நாளை (செப்.23) விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை அமலாக்கத்துறை விசாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.