லைஃப்ஸ்டைல்

காலை 7 மணி முதல் 11 மணி வரை: இந்த டைம்ல ஏன் நிறைய பேருக்கு மாரடைப்பு வருது?

By MUTHUKRISHNAN
25 Aug 2025, 11:15 AM
நாம் விழிக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது என இருதய சிகிச்சை நிபுணர் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மருத்துவர் சஞ்சய் போஜ்ராஜ் என்கிற இருதய சிகிச்சை நிபுணர், அதிகாலை நேரத்தில் தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தான் மாரடைப்பு மற்றும் திடீர் இருதய மரணங்கள் பலருக்கு ஏற்படுவதாகவும் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது என தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரங்களை இனி காண்போம்.

காலை வேளைகளில் உடல் என்ன செய்கிறது?

’ஒரு சில தினசரி பழக்கத்திற்குப் பிறகுதான் பெரும்பாலான மாரடைப்புகள் ஏற்படுகின்றன (அது மன அழுத்தம் அல்ல)' என்கிறார் மருத்துவர் சஞ்சய் போஜ்ராஜ். தனது பதிவில், நாம் விழிக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விளக்கியுள்ளார். விழிக்கும்போது கார்டிசோலின் அதிகரிப்பு, பிளேட்லெட்டுகளின் ஒட்டும் தன்மை அதிகரித்தல் மற்றும் ரத்த அழுத்தம் உயருதல் ஆகியவை மாரடைப்பு மற்றும் திடீர் இருதய மரணங்களுக்கான அபாயத்தை அதிகரிக்கச் செய்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Sanjay Bhojraj MD | Functional Medicine Doctor (@doctorsanjaymd)



மனநிலையை மாற்றும் ஆரோக்கியமான காலைப்பொழுது:

மருத்துவர் போஜ்ராஜ் ஒரு ஆரோக்கியமான காலைப் பழக்கம் எவ்வாறு நாள் முழுவதும் நல்ல மனநிலையை உருவாக்கும் என்பதை தனது பதிவில் பகிர்ந்துகொண்டார். அவர் எழுந்ததும் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை குறித்து பின்வருமாறு விளக்கியுள்ளார்.

செய்யக்கூடாதவை:

--> கண்டிப்பாக வெறும் வயிற்றில் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
--> காலை உணவைத் தவிர்ப்பது அல்லது ரத்த அழுத்த மாத்திரைகள் போன்ற மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது.
--> தூங்கி எழுந்தவுடன் உடனடியாக அவசர அவசரமாக வேலைகளில் ஈடுபடுவது.

செய்ய வேண்டியவை:

-->முதலில் தண்ணீர் அருந்த வேண்டும்.
-->உங்கள் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-->புரதச்சத்து நிறைந்த காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
-->வேலைகளைத் தொடங்குவதற்கு முன் 10-15 நிமிடங்கள் லேசான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

ஆய்வுகள் என்ன சொல்கிறது?

முல்லரும் அவரது நண்பர்களும் 1983 ஆம் ஆண்டில் மாசசூசெட்ஸில் இதய பிரச்சினை தொடர்பாக உயிரிழந்த 2203 நோயாளிகளின் இறப்புச் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு 1987 ஆம் ஆண்டு அதன் முடிவுகளை வெளியிட்டனர். அந்த ஆய்வில், காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் பலர் அதிகளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இதற்கு அடுத்தப்படியாக மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை மாரடைப்பினால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கண்டறிந்தனர். இந்த முடிவுகள் 1985 ஆம் ஆண்டில் MILIS ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போனது.

புகைப்பிடித்தல், உயர் இரத்தம் அழுத்தம் உள்ள நபர்கள், நீரிழிவு நோயாளிகள், கொழுப்பின் தன்மை அதிகமுள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. ஆரோக்கியமான உணவு முறைகள், வாழ்வியலை கடைப்பிடிப்பதன் வாயிலாக மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபாயத்தை குறைக்க இயலும்.

(மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுமாயின், மருத்துவரை அணுகி உரிய உடல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்)