Kumudam News 24 X 7 AMP Article
அண்மை

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பேரணி...முதல்வர் தலைமையில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்

By Jayakumar
10 May 2025, 05:53 PM
சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து போர் நினைவு சின்னம் வரை தேசியக் கொடியுடன் முதலமைச்சர் தலைமையில் பிரமாண்ட பேரணி
இந்தியா-பாகிஸ்தான் மோதல்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதை அனைத்தையும் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம், பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள ராணுவ கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரமாண்ட பேரணி

இந்த நிலையில், பயங்கரவாத செயலை கண்டித்தும், இந்திய ராணுவத்தின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக அரசு சார்பில் இன்று பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து போர் நினைவுச்சின்னம் வரை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் முதலமைச்சரின் அழைப்பை ஏற்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கையில் தேசிய கொடியுடன் டிஜிபி அலுவலகம் அருகில் இருந்து போர் நினைவு சின்னம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பேரணியாக சென்றனர்.

தலைவர்கள் பங்கேற்பு

இந்த பேரணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர் வைகோ, செல்வப்பெருந்தகை மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.காமராஜர் சாலையில் நடந்த பேரணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. முன்னதாக தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக இந்த பேரணி நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த பேரணியில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மட்டுமின்றி சீக்கியர்களும் கலந்து கொண்டனர்.