Kumudam News 24 X 7 AMP Article
அண்மை

sanitary workers protest: தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

By MUTHUKRISHNAN
13 Aug 2025, 12:19 PM
ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் இராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த 16.07.2025 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 01.08.2025 முதல் வேலை நிறுத்தத்தில் சுய உதவிக் குழுவின் வாயிலாக பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் போராட்ட குழுவினர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையிலும், எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து தொடர்ச்சியாக 13-வது நாளாக ரிப்பன் மாளிகை முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போராட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தூய்மைப் பணியாளர்களை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

2 நாட்களில் தீர்வு ஏற்படும் என்பதால் விசாரணையை செவ்வாய்கிழமை தள்ளி வைக்க கோரிய தூய்மை பணியாளர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டத்தை தொடரலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.