இந்தியா - பாக். போர் பதற்றம்

“தாக்குதலுக்கு பயந்து அவசரமாக வெளியேறினோம்” - பஞ்சாப்பில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்கள் பேட்டி

By Jayakumar
10 May 2025, 03:41 PM
பஞ்சாபில் சிக்கி தவித்த 12 தமிழக மாணவர்கள் தமிழ்நாடு அரசு உதவியால் சென்னை திரும்பினர்
தமிழக மாணவர்கள்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் தமிழ்நாடு அரசு உதவியுடன் டெல்லி வரவழைக்கபட்டு அங்கிருந்து சென்னை அழைத்துவரப்பட்டனர்.

அவர்களை அமைச்சர் சா.மு.நாசர், அயலகத்தமிழர் நலத்துறை துணை இயக்குனர் புகழேந்தி ஆகியோர் வரவேற்று தனி வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் பேட்டியளித்த மாணவர்கள், எல்லையில் பதட்டம் நிலவியதால் தாங்கள் இருந்த பகுதியிலும் பரபரப்பு காணபட்டதாகவும், தாங்கள் இருந்த பகுதிக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய தாக்குதல் நடந்ததால் அவசர, அவசரமாக தாங்கள் வெளியேறியதாகவும் தெரிவித்தனர்.

பதற்றமான நிலை

மேலும் அருகாமையில் இருந்த மற்ற சில மாணவர்களின் பகுதியில் தொலைத்தொடர்பு மற்றும் மின் இணைப்பு துண்டிக்கபட்டு முழு இருளில் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும், இராணுவத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் உதவியதாகவும், உதவி எண்ணை தொடர்பு கொண்டு அதன்மூலம் தமிழகம் திரும்பியதாகவும் தெரிவித்தனர்.