அண்மை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

By Jayakumar
13 May 2025, 01:11 PM
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் பரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தமிழகத்தையே உலுக்கியது.

பாலியல் வன்கொடுமை வழக்கு

இதை அடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரி ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு, ஹேரேன் பால், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள் கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்துதல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிறுதல் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைதான ஒன்பது பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது 2019 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கோவை மகளிர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதன் பிறகு வழக்கு விசாரணை தாமதமானது. அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

9 பேரும் குற்றவாளிகள்

மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதங்கள் முடிவடைந்தது.இதை அடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என கடந்த 28ஆம் தேதி நீதிபதி நந்தினி தேவி தெரிவித்தார். இந்நிலையில் நீதிபதி நந்தினி தேவி கரூர் மாவட்டம் குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பொள்ளாச்சி வழக்கு காரணமாக மறு உத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினி தேவி அதே நீதிமன்றத்தில் பணியாற்றுவார் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது. இதனால் அவர் கோவையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இன்று தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் இந்த வழக்கில் கைதான 9 பேர் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக அவர்கள் சேலம் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் இன்று காலை 10 மணிக்கு அளவில் கோவை நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர். பின்னர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற அறையின் கதவுகள் மூடப்பட்டு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. தண்டனை விவரங்கள் மதியம் 12 மணியளவில் வாசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சாகும் வரை ஆயுள் தண்டனை

இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வந்த நீதிபதி நந்தினி தேவி வந்தார். பின்னர் தீர்ப்பு தண்டனை குறித்தான விவரங்களை வாசித்தார். அதில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.