Latest News

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடங்கியதும் முடங்கியது!

By MUTHUKRISHNAN
21 Jul 2025, 11:46 AM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது. எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

2025 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் அவை தொடங்கியது முதலே கூச்சல் குழப்பம் காணப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார், அதே நேரத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரன்தீப் சுர்ஜேவாலா பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க விதி 267 இன் கீழ் அலுவல் அறிவிப்பை வழங்கினார்.

"அரசாங்கம் ஒவ்வொரு பிரச்சினைக்கும் பதிலளிக்க விரும்புகிறது. சபை செயல்பட வேண்டும். நீங்கள் இங்கு கோஷங்களை எழுப்ப வரவில்லை. சபையானது விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செயல்படுகிறது. விதிகளின்படி எழுப்பப்படும் அனைத்து பிரச்சினைகளும் விவாதிக்கப்படும்" என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

"நீங்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், எந்த பிரச்சினையாக இருந்தாலும், கேள்வி நேரத்திற்குப் பிறகு அது விவாதிக்கப்படும். சபை முதல் நாளில் செயல்பட வேண்டும், நல்ல விவாதம் நடக்க வேண்டும். ஒவ்வொரு எம்.பி.க்கும் நான் சரியான நேரத்தையும் வாய்ப்பையும் தருவேன்” என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.