Latest News

கரூர் துயர சம்பவம்.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

By Christon
28 Sep 2025, 10:08 AM
விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (செப்.27) கரூரில் மேற்கொண்ட மக்கள் சந்திப்புப் பரப்புரையின்போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் சோகத்தைப் பதிவு செய்துள்ளது.

உயிரிழப்பு மற்றும் காயம்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் இரவு 7 மணிக்கு மேல் பிரசாரம் நடைபெற்றது. இந்த நெரிசலில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தவெக பொதுச்செயலாளர் மீது வழக்கு

இந்தச் சம்பவம் தொடர்பாக, கரூர் நகர போலீசார் நேற்று இரவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், உயிரிழப்புக்குக் காரணமானதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார், மற்றும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு பிரிவுகள்

பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது, குற்றமற்ற கொலை செய்ய முயற்சி (Culpable Homicide not amounting to murder), மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுவரை தவெக தலைவர் விஜய்யின் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்றாலும், இது குறித்து போலீசார் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.