உதகைக்கு சுற்றுலா சென்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், மூத்த உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அ.தி.மு.க மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி திவ்யப் பிரியா. இவர் தனது, கணவர் கார்த்திக் ராஜா மற்றும் உறவினர்களான பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோர் மதுரையில் இருந்து கோடை விடுமுறைக்காக உதகைக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
அவர்களது வாகனத்தை பார்த்திபன் என்ற ஓட்டுநர் ஒட்டி வந்தார். மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார், முதல் கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே கார் வந்த போது பிரேக் பிடிக்காமல், மண் திட்டில் மோதி கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் திவ்யப்பிரியா,பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் அடிபட்டது. வளர்மதியும் படுகாயங்கள் அடைந்தார்.
விபந்து நடந்த சமயம் அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் காயமடைந்தவர்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திவ்யா பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
படுகாயம் அடைந்த பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி உயிரிழந்த சம்பவம் கட்சியினர் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.