Latest News

சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து.. 5 பேர் உயிரிழப்பு!

By VASUKI
01 Jul 2025, 03:59 PM
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சின்ன காமன்பட்டியில் உள்ள கோகுலேஸ் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தின் போது தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் இருக்கும் என கூறப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த பட்டாசு ஆலை உரிய உரிமம் பெற்றுள்ளதா, என்ற கோணத்திலும், விபத்துக்கான காரணம் குறித்தும், பட்டாசு ஆலையின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். விபத்து குறித்து சாத்தூர் வருவாய் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.